புதன், 31 ஆகஸ்ட், 2011

வாடகைத் தாய்

இப்போதெல்லாம் மிகவும் பிரபலமாகி வரும் கருத்தரிப்பு முறை "வாடகைத் தாய்" இது ஒரு தொழிலாகவும் ஆகி வருகிறது. இயற்கை முறையில் கருத்தரிக்க இயலாத பெற்றோர் குழந்தையை பெற்றுக்கொள்ளும் முறையாகும் இது. ஆண் பெண் உயிரணுக்களை கருத்தரிக்க செய்து அதை வேறொரு பெண்ணின் கருப்பையிலிட்டு வளர்க்கிறார்கள். நன்கு வளர்ந்து பிறந்த குழந்தையை அந்த பெண் சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் கொடுத்து விட்டு தனக்குரிய வாடகையை பெற்றுக்கொள்கிறாள். இது லக்ஷம் பல லக்ஷம் என்று வேறுபடுகிறது. (நாட்டில் ஏற்கெனவே மக்கள் தொகை அதிகமாக உள்ள நிலையில் இது எதற்கு. ஏதாவது ஒரு அனாதை குழந்தையை தத்தெடுத்து வளர்க்க கூடாதா? என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. இருந்தாலும் தன்னுடைய ரத்தத்திற்கு மக்கள் அளிக்கும் மரியாதையே வேறுதான்)

இது ஏதோ மிகப்பெரிய புரட்சி என்றோ, வெள்ளைக்காரன்தான் இதை கண்டுபிடித்தான் என்றோ எண்ணி ஏமார்ந்து விட வேண்டாம். இந்த தொழில் நுட்பம் நம் மண்ணில் பல நூறாண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது என்பதற்கு ஸ்ரீமத் பாகவதம் மற்றும் மகாபாரதம் போன்ற நூல்களில் குறிப்புகள் உள்ளன. அவற்றை இங்கே சுருக்கமாக குறிப்பிடுகிறோம்.

ஸ்ரீமத் பாகவதம் விஷ்ணுவின் பல அவதார சிறப்புகளை, குறிப்பாக ஸ்ரீகிருஷ்ணனின் அவதாரத்தை விரிவாக விளக்கும் நூல். பகவான் கண்ணன் வசுதேவர்-தேவகி தம்பதிக்கு எட்டாவது மகனாக பிறந்தார். அவருடைய தாய் மாமன், கம்சன், தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தமக்கு மரணம் சம்பவிக்கும் என்ற அசரீரி வாக்கை கேட்டதனால் வசுதேவர்-தேவகி தம்பதியினரை சிறையில் அடிக்கிறான். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை ஒருவர் பின் ஒருவராக கொள்கிறான். இப்படி ஆறு குழந்தைகளை கொன்றுவிட்டான். (இப்படி ஒரு தாய் மாமன்-இவனுங்களைதான் காது குத்தல், கல்யாணம்னு எல்லாத்துக்கும் சீர் செய்ய சொல்லுது இந்த சமூகம்) ஏழாவது முறையாக தேவகி கருவுற்றாள். இந்த நேரத்தில்தான் கம்சனை ஏமாற்ற இறைவன் திருவிளையாடல் புரிந்தார். வசுதேவருக்கு, ரோஹிணி என்ற மனைவியும் இருந்தால். அவளுடைய கருவில் தேவகி வயிற்றில் வளரும் கருவை அதிசயத்தக்க வகையில் இட மாற்றம் செய்து அருள் புரிந்தார். இப்படி இடமாற்றம் (சமஸ்கிருதத்தில் கர்பாசயம்) செய்யப்பட கருவே பலராமனாக பிறந்தது. இவர் கிருஷ்ணனுக்கு அண்ணன். கண்ணனை போலவே இவருக்கும் இரண்டு அன்னையர். அவருக்கு வளர்ப்பினால் இருவர், இவருக்கு கருவிலேயே இருவர். பலராமனுக்கு சங்கர்ஷணன் என்ற பெயரும் உண்டு. சங்கர்ஷணன் என்ற சொல்லுக்கு கருவிலேயே இடம் மாறியவன் என்று பொருள்.

இதே போல மகாபாரதத்தில் கருவை இடம் மாற்றி வளர்த்த குறிப்பு வருகிறது. ஹஸ்தினாபுர மன்னன் திருதராஷ்டிரனின் மனைவி காந்தாரி. (இன்றைய ஆப்கானிஸ்தான் நாட்டு காந்தார பகுதியை சார்ந்தவள்). இவளுடைய தம்பிதான் சூதும், வாதும் குடிகொண்ட சகுனி ஆவார். இத்தம்பதியினரின் வயிற்றில்தான் கௌரவர்கள் நூறுபேரும் பிறந்தார்கள். திருதராஷ்டிரனின் தம்பி பாண்டு, அவர் மனைவிமார் குந்தியும், மாதரியும். குந்தியின் வயிற்றில் யுதிஷ்டிரன் (தருமன்), பீமன், அர்ஜுனன் ஆகியோர் பிறந்தனர். மாத்ரியின் வயிற்றில் நகுலனும், சகாதேவனும் பிறந்தார்கள். சகோதரர்கள் ஐவரையும் பாண்டவர்கள் என்று குறிப்பிடுவார்கள்.
குந்தி வயிற்றில் தருமன் கருவுற்றிருந்த அதே நேரத்தில் காந்தாரியும் கருவுற்றிருந்தாள். ஆனால் தருமன் முதலில் பிறந்து கௌரவ-பாண்டவர் அனைவருக்கும் மூத்தவனாக திகழ்ந்தான். இந்த செய்தி கேட்ட காந்தாரி பொறாமையினால் உந்தப்பட்டவளாக பெருத்த ஆவேசம் கொண்டு உலக்கையால் தன் வயிற்றில் இடித்துக்கொண்டாள். இந்த செய்கையினால் அவள் கரு கலைந்து அனைத்தும் தரையில் கொட்டிவிட்டது. (இன்றுகூட பொறாமைபடுபவர்களை பார்த்து 'உலக்கையால் வயிற்றில் இடித்துக்கொள்' என்று கூறும் வழக்கம் நம் நாட்டுப்புறங்களில் காணப்படுகிறது) என்ன செய்வதென்று அறியாமல் அனைவரும் விழி பிதுங்கி பார்த்துக்கொண்டிருந்த பொழுது, விதுரரின் அறிவுரைக்கேற்ப வியாச முனிவரை அழைத்து வந்தார்கள். (மகாபாரத இதிகாச காவியத்தை இயற்றிய இவர் திருதராட்டிரனுக்கு தந்தை முறை. பராசர முனிவரின் மூலமாக சத்தியவதி என்ற மீனவ பெண்மணிக்கு பிறந்தவர். இந்த சத்தியவதியை சந்தனு என்கிற தமது தந்தைக்கு திருமணம் செயவிக்கவே தேவவிரதன் என்ற இளவரசன் பெரும் சபதம் செய்து, பீஷ்மர் என்னும் பெயர் பெற்றான்). வியாசமுனிவர் தரையில் சிந்திப்போன கருவை உரிய முறையில் திரட்டி பக்குவம் செய்து நூறு சட்டிகளில் சேமித்து வைக்கிறார். அங்கே அவை தகுந்த காலங்களில் வளர்ந்து குழந்தையாகின்றன. துரியோதனன் தொடங்கி அந்த நூறுகுழந்தைகளும் கௌரவர்கள் என்றழைக்கப்பட்டன. 

இப்படி கரு இடமாற்றம், செயற்கை முறை கருத்தரிப்பு போன்ற விஷயங்களை அனாவசியமாக கையாண்டுள்ள நம்முடைய பழம் பெரும் மருத்துவ முறையை நாம் உதாசீனபடுத்திவிட்டு, பக்க விளைவுகள் பல கொண்ட மேல் நாட்டு மருத்துவ முறைக்கு அடிமைப்பட்டு கிடப்பதோடு அதை தலையில் வைத்து கொண்டாடுவதை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது.  

சனி, 27 ஆகஸ்ட், 2011

கொடை வள்ளல் கர்ணன்!

"அள்ளி கொடுப்பதில் கர்ண மகா பிரபு" என்ற சொலவடை நம் நாட்டில் நிலவுகிறது. அந்த அளவிற்கு கொடை வள்ளலாக திகழ்ந்தவன் கர்ணன். மாத, பிதா, குரு, தெய்வம் என்ற நான்கு பேரின் அருளாசி இல்லாமலேயே இந்த புவியில் புகழ் பெற முடிந்த ஒருவன் கர்ணன் மட்டுமே. வாழ்க்கையில் அவன் பிறந்தது முதலே சவால்களை சந்தித்து முன்னேற்றப் பாதையில் பயணித்தான். இறந்த பிறகும் இன்று வரையில் எல்லோர் மனத்திலும் நீங்க இடம் பிடித்து புகழுடம்பு எய்தியிருக்கிறான். அவன் போற்றுதலுக்குரியவன். எனினும் கர்ணனை கொடை வள்ளல் என்ற சிறப்பைக்கடந்து பிற சிறப்புக்குரியவனாக காண முடியவில்லை. நண்பனுக்காக செஞ்சோற்றுக்கடன் தீர்த்து உயிரை விட்டான் என்பன போன்ற புகழுரைகள் அவனுக்கு பொருத்தமற்றவை என்றே எண்ணத்தோன்றுகிறது. அவற்றிற்கான காரணங்கள் இல்லாமலில்லை.

கர்ணனை தனக்கு இணையான அரசனாக்கினான், நண்பன் துரியோதனன். அவன் அர்ஜுனனை வீழ்த்தக்கூடியவன் இவன்தான், இவன் நம்மிடமிருப்பது நன்மை பயக்கும் என்ற சுய நோக்கு சிந்தனையில் கர்ணனுக்கு உயர்வு அளித்தாலும் அவன் கர்ணனை உற்ற நண்பனாகவே எண்ணி வணங்கினான், பெருமை கொண்டான். ஆனால் அதற்கு கைமாறாக கர்ணன் சிறந்த நண்பனாக விளங்கவில்லை. ஒரு நண்பனுக்குரிய இலக்கனங்கள் எதுவுமின்றியே கர்ணன் துரியோதனனிடம் பழகினான். அவற்றை உணர்த்தும் நிகழ்ச்சிகள் சிலவற்றை காணலாம்:

1. துரியோதனன் தீய சகவாசங்களுடன் உலா வந்தபோது கர்ணன் அதை கண்டிக்கவில்லை. சகுனியின் துர்போதனையை கேட்டு தனது நண்பன் அழிவுப்பாதைக்கு செல்கிறான் என்று தெரிந்தும் அதை தடுக்க அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக தானும் அத்தகு கூட்டத்தினருடன் சேர்ந்து மேலும் தீய போதனைகளை செய்யவே முன்வந்தான். பாண்டவர் நிலத்தை சூதாடி பெறவேண்டும் என்று மாத்திரமே சகுனி கூறினான். ஆனால் திரௌபதியின் சேலையை களைந்து மானபங்க படுத்தலாம் என்று யோசனை வழங்கியவனே இந்த கர்ணன்தான். 

2. குந்திதேவிதான் தன்னுடைய தாய் என்பதை அறிந்து மகிழ்ந்த கர்ணன் அப்பொழுதே தன்னுடைய பாசத்தை பாண்டவர் மீது பொழிய ஆசைப்பட்டான். குந்திக்கு இரண்டு வரம் தர முன்வந்ததே தாம் கொடை வள்ளல் என்ற பெருமையை இழக்கக்கூடாது என்பதாலும் தாய் கேட்கும் வரங்களால் பாண்டவர்களுக்கு நன்மை விளையும் என்பதாலும் மட்டுமே. இதன் விளைவு, தான் சார்ந்திருக்கும் துரியோதனன் தரப்புக்கு இழப்பு ஏற்படும் என்பதையும் அவன் நன்கு அறிந்திருந்தான்.

3.குந்தி கேட்ட வரங்கள் தன்னுடைய போர் தந்திர முறைகளில் தலையிடுகிறது என்று தெரிந்தே அவன் அவ்வரங்களை அளிக்கிறான். துரியோதனன் ஜெயித்தாலென்ன? தோற்றாலென்ன? நம் தம்பிமார் தோற்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறான். 

4.குந்தி தேவிக்கு வரம் தந்தவன் பிரதிபலனாக கேட்ட வரங்கள் துரியோதனனுக்கு வீழ்ச்சியையும், பாண்டவருக்கு வெற்றியையும் நிச்சயம் செய்திருந்தது. தான் பாண்டவருக்கு அண்ணன் என்பது அவர்களுக்கு தெரியக்கூடாது என்ற வரத்தைக்கேட்டதன் மூலமாக அவன் போரை நிச்சயித்து விட்டான். பாண்டவர்களின் அண்ணன்தான் கர்ணன் என்பது பாண்டவர்களுக்கு தெரியுமானால் அவர்கள் போர்புரியாமல் காட்டிற்கு போய்விடும் நல்மனமுடையவர்கள் என்பது கர்ணனுக்கு தெரியும். அவ்வாறு அவர்கள் போரிலிருந்து விலகாமல் போர்புரிந்தால் துரியோதனனின் வீழ்ச்சி ஏற்படும் என்பது கர்ணன் அறிந்திருக்க மாட்டானா? மற்றொரு வரத்தின் மூலம்  தான் இதுகாறும் எல்லோரும் நினைத்திருந்தது போல தேரோட்டியின் மகன் அல்ல, குந்தியின் புதல்வன்தான் என்பதை நிலைநாட்ட வேண்டும் என்ற சுயநல நோக்கு மட்டுமே தெரிகிறது. நண்பனோ அவன் வெற்றியின் நலனோ தனக்கொரு பொருட்டல்ல என்பதை உணர்த்தியிருக்கிறான் கர்ணன்.

5. நண்பன் நலம்தான் முக்கியம் என்று கருதும் எந்த நண்பனும் நண்பனுக்காக எத்தகைய வேலையையும் செய்ய தயாராயிருப்பான். இந்த வேலை எனக்கு கௌரவ குறைச்சல் என்று நினைப்பவன் சிறந்த நண்பனாக மாட்டான். அப்படித்தான் கர்ணன் செயல்பட்டான். போர்ப்படை தளபதியாக நியமிக்கப்பட்ட பீஷ்மர் எல்லோருக்கும் உரிய பணியை போர் துவங்குவதற்கு முன்னதாக ஒதுக்குகிறார். கர்ணனை கூட்டத்தோடு கூட்டமாக நின்று போர்புரியும் பிரிவில் ஒதுக்குகிறார். ஆனால் கர்ணன் அந்தப்பணியை ஏற்காமல் அது தனக்கு இழுக்கை ஏற்படுத்தியிருக்கிறது என்று மறுக்கிறான். அது மட்டுமில்லாமல் அவ்வாறு இழுக்கை ஏற்படுத்திய பீஷ்மர் போரில் வீழும் வரை தான் அவர் தலைமையின் கீழ் இயங்க மறுத்து போர் புறக்கணிப்பு செய்கிறான். நண்பன் துரியோதனன் எவ்வளவோ மன்றாடியும் அவன் போரில் பங்கேற்காமல் ஒதுங்கிவிடுகிறான். பத்தாம் நாள் போரில் பீஷ்மர் வீழ்ந்த பின்னரே பதினோராம் நாள் போரில் பங்கேற்றான். தளபதி என்ற முறையில் பீஷ்மர் சொன்ன உத்தரவை மறுத்தது முதல் குற்றம். தனக்கு கேவலமான பணியை அவர் ஒதுக்கியிருந்தாலும் தனது உயிரினும் மேலான நண்பனுக்காக அதை மனமுவந்து ஏற்றிருக்க வேண்டும். இப்படி எதுவும் செய்யாமல் நண்பன் போராடிக்கொண்டிருந்த பத்து நாட்களும் கை கட்டி வேடிக்கை பார்த்தவன் எப்படி சிறந்த நண்பனாயிருக்க முடியும்? அவன் சென்சொற்று கடன் தீர்க்க வில்லை, பாண்டவர்களுக்கு பரிவாக நண்பனை கடன் தீர்த்துவிட்டான் என்பது சரியாக இருக்கும்.

6. இப்படி மனத்தை ஓரிடத்தில் கொடுத்துவிட்டு, வெறும் உடலோடு நண்பனுக்காக போரிடுவது போல் பாசாங்கு செய்திருந்தான் கர்ணன். அவனை நேரிய முறையில் கொள்ளாமல் மோசடி செய்துதான் கொன்றிருக்கிறார்கள் என்ற புகழுரைக்கூட கர்ணன் பெற்றுவிட்டான். இவன் எல்லோரையும் நம்பி ஏமார்ந்தான் என்பது தவறு, இவனை நம்பித்தான் துரியோதனன் மோசம் போனான் என்பதுதான் சரி. கர்ணனை அர்ஜுனன் சூது செய்து கொன்றதாக கீழ்கண்ட அறுவரை கூறுவார்கள். பரசுராமர், ஹஸ்தினாபுரத்தை சார்ந்த ஒரு பிராமணர், இந்திரன், சல்லியன், குந்திதேவி மற்றும் கண்ண பரமாத்மா ஆகியோரே அவர்கள். கடைசியாகத்தான் அர்ஜுனன் அம்பெய்து வெறும் உடலை வீழ்த்தினான் என்பார்கள். ஆனால் இதில் ஒருசிறிதும் உண்மையில்லை. ஒருவர் பின் ஒருவராக செய்த செயல்களையும், அதில் கர்ணன் மட்டுமே பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதையும் விரிவாக பார்க்கலாம்.

1. பரசுராமர்: பிராமணர்களைத் தவிர வேறு யாருக்கும் கல்வியறிவு புகட்டுவதில்லை என்று விரதம் மேற்கொண்டிருப்பவர் பரசுராமர். அவரிடம் தமது குலத்தைப்பற்றி மறைத்து தான் பிராமணன்தான் என்று பொய் கூறி கல்வியறிவு பெற முயன்றான் கர்ணன். உண்மை வெளிப்பட்டபின் பரசுராமர், "நீ கற்ற கல்வி உரிய நேரத்தில் பயனளிக்காமல் போகக்கடவது" என்று சபிக்கிறார். ஆகவேதான் அர்ஜுனனை எதிர்த்து போராடும் நேரத்தில் பல மந்திரங்கள் மறந்து போய் தடுமாறும் நிலை கர்ணனுக்கு ஏற்பட்டது. கற்ற கல்வி உரிய நேரத்தில் பயனளிக்காவிடில் அக்கல்வியால் என்ன பயன்? இது கர்ணனாக தேடிக்கொண்ட விதி. பொய் கூறியதன் பலனை அனுபவித்தான். இதில் பரசுராமர் கொன்றார் என்று கூறுவது ஒருசிறிதும் பொருத்தமற்றது.

2. ஹஸ்தினாபுர பிராமணர்: ஒரு சமயம் ஹஸ்தினாபுரத்தில் வெற்றிக்களிப்பில் துரியோதனனும் கர்ணனும் தேரில் உலா வந்துக்கொண்டிருந்தனர். கர்ணன் தேரோட்டிக்கொண்டிருந்தான். அது சமயம் ஒரு பிராமணருக்கு ஊறு விளைவித்து விடுகிறான். அதற்காக அவரிடம் மன்னிப்பு கேளாமல், அவருக்கு ஆறுதல் கூறாமல் சென்றதோடு அல்லாமல் துரியோதனன் அவரை அவமானப்படுத்திய போது அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குற்றத்திற்காக அந்த பிராமணர், "நான் அவதிப்படுவது போல உன் தேறும் தக்க சமயத்தில் சகதியில் சிக்கி அவதி படுவாய்" என்று சாபமிடுகிறார். அதனால்தான் கர்ணனின் தேர் அர்ஜுனனுடனான போரில் சகதியில் சிக்குகிறது. இதனால் அந்த பிராமணர் கொன்றார் என்று கூறுவது சிறுபிள்ளைத்தனம். அவன் செய்த அபச்சாரத்திர்கான பலனைத்தான் அறுவடை செய்தான்.

3. இந்திரன்: கர்ணனுடனே பிறந்து அவனுக்கு பாதுகாப்பாக திகழ்ந்தவை அவனது கவச-குண்டலங்கள். அவை அவனுடன் இருக்கும் வரையில் யாராலும் அவனை வெல்ல முடியாது. இதை இந்திரன் அந்தண வேடத்தில் வந்து யாசகம் கேட்கிறான். கர்ணன் தானம் கொடுத்து பழக்கப்பட்டவன் என்பதால் அதையும் கொடுக்க முன்வருகிறான். இது தமக்கு அரணாக இருப்பதால் தமது நண்பனையும் காக்க முடியும் என்பதை அறிந்த கர்ணன், நண்பன் தமக்கு முக்கியமல்ல தமது கொடைவண்மைத்தான் முக்கியம் என்று முடிவு செய்கிறான். அந்த நேரத்தில், தந்தையான சூரியன் வந்திருப்பது இந்திரன்தான் என்று உண்மையை கூறி கவச-குடலங்களை தானம் தரவேண்டாம் என்கிறார். தந்தை சொல்லை கேளாமல், இந்திரனுக்கே தாம் தானம் செய்கிறோம் என்ற மமதை தலைக்கேறி தானம் செய்து விடுகிறான். ஆதலினால்தான் அர்ஜுனனுடன் போரிடும்பொழுது பாதுகாப்பில்லாமல் நிற்கிறான். இது தந்தை சொல் கேளாத குற்றத்திற்காக அவனே தேடிக்கொண்ட வினை. இதில் இந்திரனை குறை கூறுவது தவறு.

4. சல்லியன்: மத்தர தேசத்து மாமன்னனான சல்லியனை தனக்கு தேரோட்டியாக நியமிக்குமாறு துரியோதனனை கர்ணன் கோரி பெறுகிறான். தேரோட்டி மகனுக்கு தேரோட்டுவதில் தமக்கு இழுக்கு என்று முதலில் மறுத்தாலும் துரியோதனனின் வற்புறுத்தலின் பேரில் ஏற்றுக்கொண்டு தேரோட்டுகிறான் சல்லியன். தேரோட்டுவது ஒரு நாட்டின் அரசர் என்ற மரியாதையை சிறிதும் தராமல் அவரை சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதெல்லாம்  அவமரியாதை செய்கிறான். அவன் போர்த்திறம் பற்றி கூறும் யோசனைகளைஎல்லாம் புறக்கணிக்கிறான். அதில் ஒன்றுதான் நாகக்கனையை அர்ஜுனனின் மார்பை நோக்கி எய்யுமாறு அவன் கூறியது. அதை ஒதுக்கிவிட்டு கழுத்துக்கு குறி வைத்தான் கர்ணன். அவன்  ஒரு தேரோட்டித்தான் என்றும், அந்த வேலையே மட்டும் பார்க்கவேண்டும் என்றும், தன்னைப்போன்ற மாவீரனுக்கு அறிவுரைக்கூர முயற்சிக்கக்கூடாது என்றும் கூறி கேவலப்படுத்துகிறான்.விளைவு! கண்ணனின் தந்திரத்தினால் அர்ஜுனன் உயிர் பிழைக்கிறான். இதற்கிடையில்தான் தேரின் சக்கரம் சகதியில் சிக்குகிறது. அதை மீட்கும்படி சல்லியனுக்கு கட்டளையிடுகிறான். இப்போது சல்லியன், கர்ணன் ஒரு தேரோட்டிமகன், அவனுக்கு பணிந்து செல்ல தன்னால் முடியாது என்றுகூறி வெளியேறுகிறான். இங்கு கர்ணனின் பணிவின்மையும், சல்லியனைப் போன்ற அரசர்களை மதிக்கத்தவறிய பாங்கும்தான் இக்கட்டில் தள்ளியதே தவிர, சல்லியன் கர்ணன் உயிரிழக்க காரணமானான் என்று கூறுவது பேதைமை.

5. குந்திதேவி: பாண்டவர்களின் தாய்தான் தனக்கும்தாய் என்று அறிந்து பெருமைப்படும் கர்ணன் இந்த உலகையே மறந்து விடுகிறான். தாய் யார் என்பது அறிந்த மகிழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு கேட்கும் வரங்களின் பின்விளைவுகளைப் பற்றி சிறிது கவலைப்படாமல் கொடுத்து விடுகிறான். பிரதியாக கேட்ட வரங்களும் தன் நண்பனுக்கோ அவன் சேனைக்கோ நன்மை பயக்காதவையாக கேட்டான். இதனால் அவன் தோல்வியை சந்திக்க நேர்ந்ததே தவிர அவன் தோல்வியில் குந்திதேவிக்கு சிறிதும் பங்கில்லை.

6. கிருஷ்ணர்: பாரதப்போரின் சூத்திரதாரியான பெருமானை கர்ணனுடைய சாவிற்கு காரணமாக்குவது பேதைமையிலும் பேதைமை. கண்ணன் கர்ணனுடைய தான-தரும புண்ணியங்களை யாசகம் பெற்றிருக்காவிட்டால் கர்ணன் இறந்திருக்க மாட்டான். ஆனால் எழுந்து சண்டையும் போட்டிருக்கமாட்டான். கோமாவில் படுத்திருக்கும் நோயாளியைப்போல தனக்கும் பிறருக்கும் தொல்லையாகவே இருந்திருப்பான். அந்த போருக்கு ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டியது நல்லோர்களின் செயலாகும். இதைத்தான் பெருமாள் செய்தார். போருக்கு முடிவை ஏற்படுத்தியது மட்டுமின்றி கர்ணன் செய்த தானதருமங்களுக்காக திவ்விய தரிசனத்தைத்தந்து வைகுந்தப்பதவியையும் அளித்த வள்ளன்மை வேறு யாருக்கு வரும். இதைப்போய் கர்ணனின் உயிர் பறித்த செயல் என்பது விவேகமல்ல.

7. அர்ஜுனன்: அர்ஜுனன் நேர்மையற்ற போர் முறையில்தான் கர்ணனைக் கொன்றான். கர்ணன் சகதியில் சிக்கிக்கிடக்கும் தேரை மீட்டுக்கொண்டிருந்த பொழுது நிராயுதபாணியாக இருந்தான். (நிராயுதபாணி என்றால் கைகளில் ஏதும் ஆயுதமில்லாத நிலை). அப்பொழுது அம்பெய்தி அர்ஜுனன் கொன்றுவிட்டான் என்ற குற்றச்சாட்டு அர்ஜுனன் மீது சுமத்தப்படுகிறது. ஆனால் இந்தக்குற்றச்சாட்டில் சிறிதும் நியாயமில்லை. முதற்கண் கர்ணன் நிராயுதபாணியாக நிற்கவில்லை. தேர் சக்கரத்துடன் நிற்கிறான். கைகளில் ஏதோ வைத்திருப்பவன் அதை நம் மீது எய்யமாட்டான் என்பது என்ன நிச்சயம்? அவன் எய்யும்வரைத்தான் பொறுத்திருக்க வேண்டுமா? சரி! தேர்ச்சக்கரம் ஆயுதம் அல்ல, அவன் சரிந்த தேரை மீட்கத்தான் முயற்சி செய்தான் என்று சொன்னாலும் அர்ஜுனன் செய்ததில் தவறேதுமில்லை. ஒருவன் போர் புரியும்பொழுது அடுத்தவனின் குதிரை, தேரோட்டி, தேர், கொடி, வில், கதை என்று அனைத்தையும் வீழ்த்துவதுதான் போர்த்தந்திரம். இது அனைவராலும் ஏற்கப்பட்ட போர்முறை. அர்ஜுனன் கர்ணனின் தேரோட்டியை வீழ்த்த அவசியமில்லாமல் தேரோட்டி ஓடிவிட்டான். அவனுடைய தேரை நொறுக்கவும் அவசியமில்லாமல் போய் அதுவும் சகதியில் சிக்கிக்கொண்டது. இப்பொழுது அர்ஜுனன் கர்ணன் மீது பாணம் எய்வதுதானே முறையாக இருக்கும். இதில் எங்கே வந்தது தவறு? மேலும் கர்ணன் படைகலங்களை சரிசெய்துக் கொண்டு போருக்கு வரும் முன் அவனை வீழ்த்துவதுதான் ஒரு புத்திசாலி போர் வீரனுக்கு அழகே தவிர, அவன் தன்னிலையை மேம்படுத்தும் வரை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தால் அவனை விட முட்டாள் உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. பெருமானிடமே உபதேசம் பெற்ற அர்ஜுனன் முட்டாட்கள் நினைத்துப்பார்க்கக்கூட முடியாத அளவிற்கு முட்டாள்தனம் செய்வான் என்று எதிர்பார்த்தது கர்ணன் செய்த முட்டாள்தனம்.

இப்படியாக தானே தன்னைச்சுற்றி குழிவெட்டிக்கொண்டு, அதில் தன்னைத்தானே தள்ளிக்கொண்டு, மண்ணையும் போட்டுக்கொண்டுவிட்ட கர்ணன் தன்னுடைய வீழ்ச்சிக்கு பிறரை சுட்டுவது அறிவுடையோர் செய்யும் செயல் அல்ல. அவன் கொடை வள்ளல்தான்! அதற்கு பெருமானும் தரும தேவதையுமே சாட்சியாக நின்றார்கள். ஆனால் அவனுடைய கொடையாற்றலின் பெருமை அவனுடைய மற்றை பிற கீழ்மைச்செயல்களை நம்மிடமிருந்து மறைத்து நம் கண்களைக் கட்டிப்போடுவதால்தான் நாம் அவனை நல்லவன் என்று முடிவுகட்டி பிறரிடம் குற்றத்தைக்கான புறப்படுகிறோம். தவறு நம்மிடமும் உள்ளது.  

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

THE FIRST RUNNING COMMENTATOR

நேர்முக வர்ணனை என்பதை நம்மில் பலர் மறந்தே போயிருப்போம். தொலைக்காட்சிகள் பெரிதாக மக்களிடையே வளர்ந்து விட்ட பிறகு நேர்முக வர்ணனைக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. கிரிக்கெட்டில் நேர்முக வர்ணனையை கேட்டபடி வானொலி பெட்டியை காதுக்கருகே வைத்து கேட்ட கோடானுகோடி ரசிகர்களில் நானும் ஒருவன். கவாஸ்கர், கபில்தேவ், விஸ்வநாத் போன்றோர் சிவப்பா, கருப்பா, உயரமா, குட்டையா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் யாருடைய போலிங்கை விளாசினார்கள், எந்த திசையில் நான்கு, ஆறு அடித்தார்கள், நூறை எப்படி எட்டி பிடித்தார்கள் போன்ற பல விஷயங்கள் அத்துப்படி. அவர்களின் உருவங்களையும், சிறப்பான ஸ்ட்ரோக்குகளையும் மறுநாள் பேப்பரை பார்த்து ரசிப்போம். அவ்வளவு சிறப்பு நேர்முக வர்ணனைக்கு உண்டு. வர்ணனையாளர் களத்தில் என்ன நடக்கிறது என்பதை உடனுக்குடன் நயமாக சொல்ல வேண்டும். அது ரசிப்பிற்குரியதாகவும் இருக்க வேண்டும். ஒரு சில வர்ணனையாளர்களுக்கென்றே ரசிகர் கூட்டம் கூட இருந்தது. அத்தகைய உயர்ந்த பெருமையெல்லாம் தொலைகாட்சி வர்ணனையாளர்களுக்கில்லை. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை யாரும் காது கொடுத்து கேட்பது கூட இல்லை. 

சரி இந்த நேர்முக வர்ணனையை (First Running Commentator) முதன் முதலில் செய்தது யார் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. சிலர் இது ஏதோ வெள்ளைக்காரன் புகுத்திய நடை முறை என்று நினைத்திருப்பார்கள். ஆனால் இது நம் இந்தியர்கள் கையாண்ட வழிமுறைதான் என்பதை கேட்டால் அசந்து போவீர்கள். ஆம்! மகாபாரதத்தில் வரும் திருதராட்டிர மாமன்னனின் செயலாளராக இருந்த சஞ்சயன் தான் முதல் நேர்முக வர்ணனையாளர் என்ற அந்த சிறப்பிற்குரிய மாமனிதன் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இல்லையா? இந்த சிறப்பு வாய்த்தது ஒரு சுவாரசியமான நிகழ்வு.

வனவாசத்தையும், மறைந்து வாழும் நிலையையும் வெற்றிகரமாக முடித்த பாண்டவர்கள், தங்களுடைய உரிமைக்குரிய நிலத்தை கேட்டு ஸ்ரீகிருஷ்ணனை கௌரவர்களிடம் தூது அனுப்புகின்றார்கள். அவர்களுக்கு உரிய நிலத்தை திரும்ப கொடுக்க கூடாது என்பதில் துரியோதனன் மிகவும் உறுதியாக இருக்கிறான். அதனால் தூது வரும் கண்ணனையும் அவமானப்படுத்த நினைக்கிறான். சபையில் வைத்தே கண்ணனை கொன்று விட வேண்டும் என்றும் சூது செய்கிறான். மாநிலத்தின் பேரரசன் திருதராட்டிரன் என்றாலும், துரியோதனன் வெறும் இளவரசன்தான் என்றாலும் அவனுடைய புத்திர பாசத்தால் தன் மகன் செய்யும் அத்தனை அட்டூழியங்களையும் கண்டும் காணமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் (இந்த காலத்திலும் அரசியலிலும், ஆட்சியிலும் இப்படிப்பட்ட திருதராட்டிரர்கள் இருக்கலாம், அவர்கள் யாராவது உங்கள் சிந்தையில் வந்தால் அதற்கு நாம் பொறுப்பில்லை). சபையில் ஒரு பள்ளம் அமைத்து அதில் மல்லர்களை நிரப்பி அதை மூடி அதன் மீது சிறப்பான ஆசனத்தை கண்ணனுக்கு என்று அமைக்கிறான் துரியோதனன். கண்ணன் அமர்ந்தவுடன் எடை தாளாமல் ஆசனம் நொறுங்கி பள்ளத்தில் விழும். அங்கே உள்ள மல்லர்கள் கண்ணனை கொன்று விட வேண்டும், என்பதுதான் அவன் திட்டம். 

அவ்வாறே சபைக்கு வந்த கண்ணன் ஆசனத்தில் அமர்கிறான். ஆசனம் நொறுங்கி பள்ளத்தில் விழுகிறது. ஆனால் கண்ணன் விழவில்லை. மாயன் அல்லவா? மாறாக பேருருவம் (விஸ்வரூபம்) எடுக்கிறான். அதை கண்டு அவையோர் அனைவரும் பணிகிறார்கள், துரியோதனனை தவிர. தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்கிறார்கள். கண்ணன் காலடியில் சிக்கி மல்லர்கள் மாண்டு போவார்கள். திருதராட்டிரன் தன் மகனை மன்னிக்கும்படி மன்றாடுகிறான். கண்ணன் அப்போது அவையோருக்கு அருள் பாலிக்கிறான். தன்னுடைய தூது வந்த நோக்கத்தை தெரிவிக்கிறான். ஒரு பிடி மண்ணைக்கூட தர மாட்டேன் என்று துரியோதனன் மறுத்து விடுகிறான். பின்பு போர்தான் முடிவு என்று அதற்கு நாளை நிச்சயம் செய்து விட்டு பாண்டவர் இருப்பிட செல்ல தயாராகிறான். அப்போது திருதராட்டிரன் கண்ணனை பணிந்து தன் மகன் மீது கருணை காட்டும்படி வேண்டுகிறான்.அது தன் கையில் இல்லை என்றும் தருமா தேவதைதான் அதை செய்யக்கூடியவள் என்றும் பதிலுரைக்கிறான். இருந்த போதும், போர்க்களத்தில் என்ன நடக்கிறது என்பதை திருதராட்டிரன் தமது அரண்மனையிலிருந்தவாறே காணக்கூடிய வகையில் அவனுக்கு ஞானக்கண்ணை அளிப்பதாக கண்ணன் கூறுகிறான். 

இதை கேட்ட திருதராட்டிரன், "கண்ணா! நான் பிறவியிலிருந்தே பார்வையில்லாமல் இருந்து வந்துள்ளேன். இப்போது நீ தரும் பார்வையை வைத்து என்மகன் யார் பிறர் மக்கள் யார் என்று பார்த்து அறிய என்னால் முடியாது. ஒரே குழப்பம் மட்டுமே மிஞ்சும். ஆகவே அந்த ஞானக்கண்ணை என்னுடைய செயலாளராகவும், தேரோட்டியாகவும் செயல்படும் அன்புமிக்க சஞ்சயனுக்கு அளிப்பாய். அவன் அதை பார்த்து என்ன நடக்கிறது என்று எனக்கு சொல்லட்டும். அதை வைத்து உண்மை நிலையை நான் அறிந்து கொள்கிறேன்" என்று கூறினான். அதன்படி கண்ணபரமாத்மா சஞ்சயனுக்கு ஞானவொளியை அளிக்கிறார். அவரே மகாபாரத யுத்தம் முழுவதையும் நமக்கு நேரடி வர்ணனை செய்து அளிக்கிறார். 
ஸ்ரீமத் பகவத்கீதையின் முதல் ஸ்லோகமே இவ்வாறுதான் தொடங்குகிறது:

धृतराष्ट्र उवाच I

धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सव I
मामका: पान्दवाश्चैवा किमकुर्वत संजय II 

 த்ருதராஷ்ட்ர உவாச்ச 

தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே சமவேதா யுயுத்சவ I
மாமகா: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத சஞ்சய II

"தர்ம பூமியான குருக்ஷேத்ரித்தில் யுத்தம் புரியும் நோக்கத்தோடு களம் இறங்கியுள்ள என்னுடைய மக்களும் பாண்டுவின் புதல்வர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று திருதராட்டிரன் கேட்டான்" என்பது இதன் பொருள். அதாவது என்ன நடக்கிறது என்பதை உன் ஞானக்கண் கொண்டு அறிந்து எனக்கு சொல் சஞ்சயா என்று திருதராட்டிரன் கேட்கிறான். அதன் பின்னர் ஸ்ரீமத் பகவத்கீதையும் அதை தொடர்ந்து பதினெட்டு நாள் போரின் வர்ணனையும் சஞ்சயனால் நேரடியாக செய்யப்படுகின்றன. சஞ்சயனின் நேர்முக வர்ணனையின் லாபம் நமக்கு கீதை கிடைத்தது. அதன் மூலம் இன்றும் பெருமானின் உபதேசங்களை நாம் தினமும் வாசித்து மனக்கண்ணால் காண முடிகிறது. கீதையை படிக்க, உங்கள் மொழியில் கேட்க, பொருளை புரிந்துக்கொள்ள இந்த தளத்திற்கு செல்லவும்: Bhagavad Gita