புதன், 5 அக்டோபர், 2022

இந்து மன்னன் இராஜராஜ சோழன்

 இராஜராஜ சோழன் காலத்திய கல்வெட்டு எதிலாவது 'இந்து' என்ற சொல் இருக்கிறதா? - இப்படி கேட்பவர்களுக்கு தங்களைப் பற்றியும், தங்களது மேதாவித்தனத்தைப் பற்றியும் மிகவும் பெருமையாக இருக்கும்! ஆனால், உண்மையில் அவர்கள் தங்களது அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அறியமாட்டார்கள்!

இந்து என்பது ஆபிரகாமிய மதங்களைப்போல ஒரு சராசரி மதமல்ல. அது இம்மண்ணில் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் வாழ்வியல் முறையாகும்! ஆங்காங்கே எண்ணற்ற புண்ணியாத்மாக்கள், சித்தர்கள் தோன்றி மக்களை நல்வழி நடத்தினாலும், தங்கள் பெயரில் ஒரு மதத்தையோ, இயக்கத்தையோ அவர்கள் தோற்றுவிக்கவில்லை. அதனால் மக்கள் பெயரெதுவும் தேவையின்றியே ஒரு சிறப்பான அடையாளத்துடன்தான் வாழ்ந்து வந்தார்கள். அதனால், இந்து என்று நம்மை நாம் அழைத்துக்கொள்ள வேண்டிய அவசியமே எழவில்லை. அப்படி இருக்கும்போது, இந்து என்ற பெயர் இல்லாமல்தான் இருந்திருக்கும். அதனால் நாம் இல்லாமல் இருந்தோம் என்றோ, நமக்கென ஒரு வாழ்வியல் முறை இல்லாமல் இருந்தது என்றோ எண்ணுவது வடிகட்டிய முட்டாள்தனம்! வெளியிலிருந்து கடைவிரிக்க வந்தவர்களுக்கு, இங்கே ஏற்கெனவே இருக்கும் ஒழுக்கவியலை தனியாக அடையாளப்படுத்த ஒரு பெயர் தேவைப்பட்டது. தங்கள் வசதிக்காக, 

சிந்து (இந்து) நதிக்கு அப்பால் இருக்கும் தேசத்தை இந்தியா என்றும், அம்மக்களை இந்துக்கள் என்றும் அவர்கள் அழைத்தார்கள். 


இம்மண்ணுக்கு பாரததேசம் என்றேதான் பெயர் இருந்திருக்கிறது! இந்தியா என்ற பெயர் அந்நியர்களால் சூட்டப்பட்டது! 15-ஆம் நூற்றாண்டில், இந்தியாவுக்கு கடல்வழிபாதை கண்டுபிடிக்கிறேன் என்று கிளம்பிய கொலம்பஸ், இந்தியாவைக் கண்டறியாமல் வேறு ஒரு தீவுக்கூட்டத்தை அடைந்து அதைத்தான் இந்தியா என்று அழைத்தான். அது இந்தியா அல்ல என்று தெரிந்ததும், பின்னர் அது மேற்கிந்தியத்தீவுகள் என்று அழைக்கப்படலாயிற்று! ஆக, 15-ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே இந்தியா என்ற பெயர் மேலை நாடுகளில் பிரபலமாகி இருந்தது!


இன்னும் பின்னாடிச் சென்றால் பைபிளில் இந்த நாடு இந்தியா என்று அழைக்கப்பட்டதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன (எஸ்தர் 1:1 & எஸ்தர் 8:9) பைபிள் பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு மனிதர்களால் தொகுக்கப்பட்டது என்றாலும், கி.மு.165 & கி.பி.1200 வருடங்களுக்கு இடையேதான் அது எழுதப்பட்டிருக்கிறது. அப்படியெனில் கி.மு. 165 முன்னரே இந்நாட்டை அந்நியர்கள் இந்தியா என்றுதான் அறிந்திருந்தனர் என்பது தெளிவாக விளங்கும். 


இந்நாடு பாரதம் (இந்தியா), இதன் குடிமக்கள் பாரதியர்கள் (இந்தியர்கள்), இதன் பண்பாடு பாரதம் (இந்து) என்றுதான் காலங்காலமாக அறியப்பட்டு வருகிறது! ஆகவே, இந்து, இந்தியா ஆகியவற்கு எதிரான மனநிலை முற்றிலும் கண்டிக்கத்தக்கது!!


இராஜராஜன் கல்வெட்டுகள் மட்டுமின்றி வேறெந்த கல்வெட்டுகளிலும்கூட இந்து என்ற பெயர் இருக்காதுதான்! நமக்கென ஒரு அடையாளம் இயல்பான வாழ்வியல்முறையாக இருக்கும்போது, அதற்கு பெயரே தேவையில்லாதபோது, அந்த பெயர் பின்னாளில் யாரோ, கதவு எண் பொறித்தது போல, பெயர் வைத்தால், அது நம் கல்வெட்டுகளில் இடம்பெறாமல்தான் போயிருக்கும். அதை ஒரு பெரிய சாட்சியாகக் கொண்டு வாதிடுவது எத்தகைய பேதைமை!


திருக்குறளில் எந்த இடத்திலுமே தமிழ் என்ற வார்த்தையோ, தமிழ்நாடு என்ற வார்த்தையோ சொல்லப்படவே இல்லை. அதனால் அவையெதுவுமே திருக்குறள் எழுதப்பட்ட காலத்தில் இல்லை என்று சொன்னால் எப்படி நகைப்புக்குரியதாக இருக்குமோ, அப்படி இருக்கிறது இந்து என்ற சொல்பற்றி மூடர்கூட்டம் எழுப்பும் கேள்வியும்!


1969-இல் அதிகாரப்பூர்வமாக "தமிழ்நாடு" பெயர்வைப்பதற்கு முன்பு தமிழ்நாடு என்ற பெயர் பாரதியார் பாடல்களில் காணப்பட்டது! அதற்கும் முன்பாக என்று பார்த்தால், எந்தவொரு அதிகார குறிப்பிலும் தமிழ்நாடு என்ற பெயர் இருப்பதாகத் தெரியவில்லை! ஆந்திரர்கள் நம் பகுதியை 'அரவநாடு' என்றும், நமது மொழியை 'அரவபாஷை' என்றும், நம்மை 'அரவாள்ளு' என்றும் அழைத்திருக்கிறார்கள்! இந்த அரவநாடு போன்று, பாரதநாட்டுக்கு அந்நியர்கள் குறிப்பிட்ட பெயதான் இந்தியா!!


இலக்கியங்கள் என்று கொண்டால் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பரிபாடல், பெரியபுராணம் மற்றும் இராஜராஜ சோழனுலா ஆகியவற்றில் தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெற்றிருந்தாலும், அது இன்றைய தமிழ்நாட்டைக் குறிக்கும் என்று சொல்லிவிடமுடியாது. ஏனெனில், இலக்கியத் தமிழ்நாட்டின் பல பகுதிகளை நாம் இன்று இழந்திருக்கிறோம். உதாரணத்திற்கு,  கேரளமும் தமிழ்நாட்டின் பகுதிதான் என்று சொன்னால் சேட்டன்களுக்கு கோபம் வரும்! இலக்கியங்களில் கூறப்பட்ட தமிழ்நாடு போல பல்வேறு புராண, இதிகாசங்களில் நம்நாடு பாரதம் என்றே கூறப்பட்டு வந்தது! என்ன பெயரில் அழைத்தாலும் புராதனமாக இங்கே ஒரு நிலபரப்பும், வாழ்வியல் முறையும் இருந்ததை யாரும் மறுப்பதற்கில்லை!!


ஒரு ஊரில் ஒரேயொரு மளிகைக்கடை மட்டுமே இருந்தது! தாத்தா-அப்பா-பிள்ளை என்று வழிவழியாக அந்தக் கடையை நடத்தியவர்கள் அதற்கு பெயர் எதுவும் வைக்கவில்லை. மக்களும் எந்த பெயரிட்டும் அழைக்காமல், அதை வெறுமனே 'கடை' என்றே அழைத்து வந்தனர்! கடைக்குச் சென்று பொருள் வாங்கி வா என்றாலே எல்லாரும் அந்தக்கடைக்குச் சென்றே வாங்கி வந்தனர்!


சில காலங்களுக்குப் பிறகு, அதே ஊரில் வெளியூரிலிருந்து வந்த ஒருவரும் ஒரு புதியகடையைத் திறந்தார்! அதற்கு 'குப்புசாமி மளிகைக்கடை' என்று பெயரும் வைத்தார்! அதிலும் மக்கள் சென்று பொருள் வாங்கத் தொடங்கினர்! இப்போது, கடைக்குப்போய் பொருள் வாங்கி வா என்று பொதுவாக சொல்ல முடியவில்லை! அப்படி சொன்னால் எந்த கடை என்ற கேள்வியும் எழுந்தது! அதனால், குப்புசாமி கடை, பழையகடை என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டியதாயிற்று! பழைய கடைக்காரர் பெயர் எதையும் தனது கடைக்குச் சூட்டிக்கொள்ளவில்லை என்றாலும், மக்கள் அவரது பெயராலேயே, இராமசாமிக்கடை' என்று அந்த கடையை அடையாளம் கண்டனர். 


இராமசாமியின் கடை, இராமசாமி பிறப்பதற்கு பல ஆண்டுகள் முன்னிலிருந்தே அந்த ஊரில் இருக்கிறது என்றாலும், போட்டிக்கடையிலிருந்து அதை பிரித்துக்காட்ட மக்களே, தங்கள் வசதிக்காக இராமசாமி என்ற பெயரை சூட்டியுள்ளனர்! புதிய கடையான குப்புசாமி கடைக்கு தோற்றம், பதிவு போன்ற பல குறிப்புகள் இருப்பது போல இராமசாமி கடைக்கு எதுவும் இல்லாமல் இருந்தது. அதனால் பதிவு அதிகாரி யூகமாக ஒரு 100-150 ஆண்டுகள் பின்னால் சென்று ஒரு தேதியை பதிவிட்டுக் கொண்டார்! அந்த கடைக்காரரும் 150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கடை என்றே விளம்பரங்களிலும் போட்டுக்கொண்டார்!


அந்த விளம்பரத்தைப் பார்த்த குப்புசாமி கடை ஆதரவாளரான 'நொண்டி'மாறன் வகையறாக்கள் அதை கிண்டல் செய்யலாயினர்! இராமசாமியின் வயதோ அறுபதுகூட ஆகவில்லை! அவரது கடைக்கு மட்டும் 150 ஆண்டு பாரம்பரியம் எப்படி வந்திருக்கும்? 60 ஆண்டுகளுக்கு முன்பு இராமசாமி என்ற பெயரே இல்லாதபோது 150 ஆண்டு பாரம்பரியம் என்று கூறுவது ஏமாற்று வேலை! குப்புசாமியின் வியாபாரத்தை முடக்கும் செயல்! என்று கண்டபடி பேசித் திரியலானார்கள்!! 

திங்கள், 20 அக்டோபர், 2014

கயவர்களுக்கு பாரத ரத்னாவா?

இன்றைய தினம் (20/10/2014) அதிமேதாவி சுப்ரமணிய சுவாமி முத்து ஒன்றை உதித்திருக்கிறார். அதாவது இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு இந்திய நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்க வேண்டுமாம். இந்த செய்தியை தொலைக்கட்சிகளில் கண்டபோது எனக்கு வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை. தமிழக அரசியல் கட்சிகளை சீண்டுவதே இந்த சு.சுவாமிக்கு வாடிக்கையாகிப் போனது ஊரறிந்த விஷயம். அவ்வாறாக சீண்டுவதாக நினைத்து மீண்டும் இப்படி உளறிக்கொட்டி இருக்கிறார் இந்த அதிபுத்திசாலி அங்குசாமி.

பாரத ரத்னா என்பது இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த பெருமையாகும். பாரத நாட்டிற்கு பெருமை சேர்த்த பெருமக்களை கௌரவிக்கும் விருது. இந்த விருது சில அரசியல் காரணங்களுக்காக சர்ச்சைக்குள்ளாகி இருந்தாலும், இதுவரை இந்த விருதை அலங்கரித்தவர்கள் யாரும் சாதாரணமானவர்கள் அல்ல. ஒவ்வொருவரும் ஒரு ரத்தினமே. அத்தகைய பெருமக்கள் வரிசையில் இடம் பெற ஒரு தகுதி வேண்டும். அத்தகைய தகுதி சிறிதும் இல்லாத ராஜபக்ஷே போன்ற கீழ்மக்களுக்கு இந்த விருதை வழங்க வேண்டும் என்று சு.சுவாமி கோரி இருப்பது, இந்த விருதை இதுகாறும் பெற்ற மேன்மக்களை சிறுமைப் படுத்தும் செயலி அன்றி வேறொன்றும் இல்லை. 

ராஜபக்ஷே இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும்படி எந்த ஒரு சிறப்பான செயலையும் செய்துவிடவில்லை. ஆனால் அதற்கு மாறாக இந்திய துணைக்கண்டத்திற்கும், இந்தியமக்கள், குறிப்பாக தமிழக மக்களுக்கும் தீமை தரும் பல நிகழ்வுகளை செய்து காட்டியுள்ள ஒரு மிகச் சிறந்த கயவன். கயவன் என்ற சொல் கூட தம்மை நொந்துக் கொள்ளும்படியான கிழமை படைத்தவன் இந்த பெரிய மனிதன். இத்தகைய ஒருவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று கோருபவன் எத்தகைய கோணல் மனம் படைத்தவன் என்பதை நாகரீக மனிதர்கள் புரிந்துக் கொள்வார்கள். 

ராஜபக்ஷே இந்திய நாட்டிற்கு எரிச்சலை ஊட்டும் விதமாக இலங்கையில் சீன ராணுவத்திற்கும், சீன ஒற்றர்களுக்கும் அடித்தளம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். எந்த நேரத்திலும் சீனா மூலமாக ஒரு தாக்குதல் நிகழுமேயானால் அதற்கு இலங்கை பெரும் பங்கையாற்றும் விதமாக அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுள்ளார் ராஜபக்ஷே. இலங்கையுடன் எந்த ஒரு ராணுவ அல்லது வெளியுறவு நடவடிக்கை நடந்தாலும் அது தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும் என்று சீன அரசு அறிவிக்கும் அளவிற்கு இலங்கைக்கும் சீனாவிற்கும் நெருக்கம் இருக்கிறது. சீன நெருக்கம் என்பது இந்திய பெருங்கடலில் இந்திய ஆதிக்கத்தை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டதாகும் என்பது உலக அரசியல் சிறிதும் இல்லாதவர்கள் கூட அறிந்த விஷயம். இத்தகைய செயல்கள் மூலம் தாம் இந்திய நலனுக்கு எதிரானவர் என்பதை தெளிவாக்கி இருக்கிறார் ராஜபக்ஷே. 

கடந்த காங்கிரசு அரசும் சரி, இப்போதைய மோடி அரசும் சரி பலமுறை வற்புறுத்தியும் 13A அரசியல் சட்ட திருத்தத்தை இன்றுவரை கொண்டுவராத ஒரு பெருந்தகையாளன் இந்த ராஜபக்ஷே. 

இந்திய நாட்டின் நலத்தை சீர்குலைக்கும் எண்ணம் கொண்ட பாகிஸ்தானுடன் ராணுவ மற்றும் வெளியுறவு ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டு இந்திய அரசிற்கு ஏளன பார்வையை பரிசளித்தவன் இந்த ராஜபக்ஷே.

இலங்கையின் ராணுவ வலைதளத்தில் தமிழக முதலவர் பாரத பிரதமருக்கு கடிதம் எழுதுவதை கொச்சைப் படுத்தி ஏளன சித்திரம் வரைந்த கீழ்மக்களின் அதிபர் இந்த ராஜபக்ஷே. 

இப்படி பாரத ரத்னா விருதிற்கு சிறிதும் பொருத்தமில்லாத ராஜபக்ஷேவை அவ்விருதிற்கு சிபாரிசு செய்யும் சுப்ரமணிய சுவாமியை பாரதிய ஜனதா கட்சி கண்டிக்க வேண்டும். அல்லது இந்த விஷயத்தில் தங்களின் நிலைப் பாட்டை தெளிவாக்க வேண்டும். இதை விடுத்து சு.சுவாமி செய்யும் சேட்டைகளை வழக்கம் போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் அது மனக்கசப்பை மட்டுமே உருவாக்கும். இதற்குப் பதிலாக பாரத ரத்னா விருதை இந்திய விரோத போக்கை ராஜபக்ஷே போல் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகவே கடைபிடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்களுக்கு வழங்கி விடலாம்.

ராஜபக்சேவுக்கு பா.ர. கொடுக்க திடீர் என்று சிபாரிசு செய்ய  வேண்டிய என்ன?  அவர் கூறும் காரணமான விடுதலைப் புலிகளை அழிப்பு நிகழ்ந்தது 2009 இல். ஆறு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் ஞானம் வந்ததா? இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இப்படி ராஜபக்ஷேவை போற்றி வைத்தால் தமிழகத்தில் உள்ள மக்கள் உணர்ச்சி வசப்பட்டு சு.சுவாமி வீட்டின் எதிரில் ஆர்பாட்டம் செய்வார்கள் என்ற எதிர் பார்ப்பு சு.சுவாமிக்கு இருக்கலாம். அங்கே தப்பித் தவறி  ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதையே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று கூறி தமிழக ஆட்சியை கவிழ்க்கலாம், அல்லது ஜெயலலிதாதான் இதில் ஈடுபட்டிருக்கிறார் என்று உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டு அவருடைய ஜாமீனை ரத்து செய்ய கோரலாம் என்ற கோரமான புத்தியாக கூட இருக்கலாம். யார்தான் அறிவர் அற்பர்களின் அடுத்த அசைவை...!!     


வெள்ளி, 10 அக்டோபர், 2014

இப்படித்தானோ!!

ஒரு சிலவற்றை நாம் சரியாக புரிந்துகொள்வதில்லை. வழக்கமாக பொதுவில் வழங்கப்படும் நிகழ்வுகளையே நாம் பெரிதாக கொள்கிறோம். ஆழ் பொருளை காணத் தவறிவிடுகிறோம். இதற்கு அறியாமை காரணமோ அல்லது அகங்காரம் (திமிர் அல்ல) காரணமோ தெரியவில்லை. எதுவாக இருப்பினும் தவறை தவறாக சரியாக புரிந்து வைத்துக்கொள்கிறோம். அத்தகைய சில சரியான தவறுகள் இங்கே:

ஆன்மிகம்:

நம்மில் பெரும்பாலோருக்கு ஆன்மிகம் என்றால் என்னவென்றே தெரியாது. அதை பேசுபவரும் சரி, கேட்பவரும் சரி ஆன்மீகத்தின் உட்பொருளை அறியாமலேயே இருக்கிறார்கள். பொதுவாக ஒருவர் ஆன்மீக வாதி என்றால் நாம் உருவகப் படுத்தும் அடையாளம் அவர் கடவுள் பக்தி உள்ளவராக இருக்கவேண்டும், தவறாமல் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லவேண்டும், மத சின்னங்களை அணிந்திருக்க வேண்டும், மத மற்றும் அது சம்பந்தமான வாத, விவாதங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று இப்படியாக பல செயல்களில் ஈடுபட வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒருவர் நம் கண்ணெதிரே தோன்றினால் நாம் அவரை ஆன்மீகவாதி என்று ஏற்றுக்கொள்ள மாட்டோம். சொல்லப்போனால் நாம் அவரை நாத்திகவாதி என்றே முத்திரை குத்தி விடுவோம். 
இப்படி இருப்பவர்களை  மட்டும் நாம் ஆன்மீகவாதி என்று சொல்வோமானால், இவர்கள் இலக்கணப் படி ஆன்மீகவாதி என்ற சொல்லுக்கு கோவில் பெருச்சாளி மட்டுமே முற்றிலும் பொருத்தமான நபராக இருக்க முடியும். அது கோவிலிலேயே வாசம் செய்கிறது. திருநீறு, எண்ணெய் போன்ற பொருட்களில் குதித்து விளையாடி உடல் முழுவதும் தரித்துக் கொள்கிறது. அங்கே வருவோர் பேசும் பேச்சுகளை (வாத-விவாதம்) செவிமடுத்து கேட்கிறது. இத்தகைய முழு தகுதியும் அதற்கிருப்பதால் அதுவே சிறந்த ஆன்மீகவாதியாக இவர்கள் ஏற்றுக் கொள்ளலாம்.

அரசியல்வாதி:

நாம் இன்று அரசியல்வாதி என்ற சொல்லுக்கு இலக்கணமாக போட்டு வைத்திருக்கும் சில நிபந்தனைகளாவன:
இன்றைய அரசியல்வாதி ஏதோ ஒரு கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும், அந்த கட்சியின் கொடியை குறிக்கும் கரை கொண்ட துண்டு அல்லது வேட்டியை அணிந்திருக்க வேண்டும். தேர்தல் சமயங்களில் அக்கட்சியின் கொள்கைகளை விளக்கி முழங்க வேண்டும், உண்ணாவிரதம், கடையடைப்பு போனவற்றை செய்ய வேண்டும், கழுத்திலும் கைகளிலும் நகைக்கடை அலங்கரிப்பை செய்து கொண்டு உயர் ரக கார்களில் பவனி வர வேண்டும், கட்டை பஞ்சாயத்து செய்வது, கந்து வட்டி விடுவது, குத்தகை எடுப்பது, தண்டல் வசூலிப்பது, என்று தங்களால் இயன்ற சமூக சேவை செய்வது போன்றவற்றை மட்டுமே நாம் அரசியல் வாதி என்று சொல்ல தயாராக இருக்கிறோம். 

இப்படி அரசியல்வாதிகளை நாம் உருவகப் படுத்தி பழகிவிட்டமையால் கட்சி சாராமல், மேற்படி செயல்களில் ஈடுபடாமல், சமூக சேவை செய்த எத்தனையோ பெருமக்களை மறந்து போய்விட்டோம். மேற்படி காரியங்களை செய்வதுதான் அரசியல்வாதியின் இலக்கணம் எனில் நம் வீட்டு வாசலில் நாம் எரியும் எச்சிலுக்காக காத்திருக்கும் தெரு நாய் கூட மிகச் சிறந்த அரசியல்வாதி என்று கூறிவிடலாம். அது கட்ட பஞ்சாயத்து செய்கிறது, மெலிந்த நாயை மிரட்டி உணவை அபகரிக்கிறது (தண்டல் வசூல்). கரி சட்டியில் வாயை நுழைத்து தன் முகமெல்லாம் கரி பூசி கொள்கிறது (கட்சிக் கொடி), சதா தெருமுனையில் நின்று கத்திக் கொண்டிருக்கிறது (கொள்கை விளக்க முழக்கம்), அந்த தெருவையே ஆக்கிரமித்துக்  கொள்கிறது (குத்தகை எடுப்பது). நம்முடைய அரசியல்வாதி குறித்த பார்வைக்கு இந்த தெருநாயும் பொருத்தமாகத் தானே இருக்கிறது?

படிப்பாளி:

இன்று நம்மிடம் உள்ள பொருள் விளங்கா பிரச்சனைகளில் இந்த படிப்பாளியும் இடம் பெற்றுவிடுகிறான். நாம் ஒருவரை படிப்பாளி என்று கொள்ள வேண்டுமானால் அவர் மிகப் பெரிய படிப்பெல்லாம் படித்திருக்க வேண்டும். பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, முனைவர், என்றெல்லாம் படித்திருக்க வேண்டும். கட்டுரைகள், ஆய்வுரைகள், விளக்க நூல்கள் போன்றவற்றை படிக்கவோ அல்லது  எழுதாவோ செய்ய வேண்டும். முக்கியமாக தம்மை போன்றே ஒரு படிப்பாளியுடன் நட்போ, உறவோ கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்ள இயலவில்லை என்றாலும் படிக்காத கீழ்மக்கள் சகவாசம் தவறியும் கொள்ளக் கூடாது. இதுவே நாம் படிப்பாளி என்று சொல்லும் மனிதருக்கான இலக்கணமாக கொண்டிருக்கிறோம். உண்மையான படிப்பாளியை நாம் அறியும் வண்ணம் படித்திருக்க வில்லை. 

மேற்படி நபர்கள்தான் படிப்பாளிகள் என்றால் இன்றைய நிலையில் மிகச்சிறந்த படிப்பாளியாக நூலகங்களும் அங்கே வசிக்கும் புத்தகப் புழுக்களும் உள்ளன. அவையே மொத்த புத்தகங்களையும் தம்முள் கொண்டிருக்கின்றன. அவற்றின் மொத்த பக்கங்களும் அவற்றிற்கு அத்துபடி. மற்றபடி மேற்படி படிப்பாளிகளுக்கும் இவற்றிக்கும் வித்தியாசம் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை. "கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவனற்றாள் தொழாரெனின்". இருவரும் இதை படித்து மட்டும் இருப்பார்.

அரசு ஊழியர்: 

அலுவலகங்களுக்கு எப்போதுமே நேரம் தவறி செல்வது, செல்ல நேர்ந்ததற்கான காரணமாக ஒரு சராசரி பொய்யை சொல்வது, அரசு அலுவலகங்களில் ஒரு இருக்கையை ஆக்கிரமித்து அமர்ந்திருப்பது, அங்கே மேசைகளில் கட்டுக்கட்டாக தேங்கி நிற்கும் கோப்புகளை அவ்வப்போது புரட்டிப் பார்த்து தூசு தட்டி வைப்பது, தம்மை அணுகுவோருக்கு ஏதோ ஒரு பதிலை சொல்லி அனுப்புவது, பஞ்சப்படி, போனஸ், ஊதிய உயர்வு எப்போது வரும் என்று எதிர்பார்ப்பது, விடுப்பு எடுக்க, வைப்புநிதி கடன் பெற, வருமானவரி விலக்கு பெற என்று அனைத்திற்கும் ஏதோ ஒரு பொய்யை சொல்லி வைத்து சலுகை பெறுவது, வேலை நிறுத்தம், தர்ணா, என்று சதா ஒரு போராட்டம் செய்து அரசையும், மக்களையும் மிரட்டுவது, மக்கள் எதிர் பார்த்து வந்த காரியங்களை "கண்ணியமாக" செய்து முடிக்க பெற வேண்டியதை பெறுவது. கட்டி வந்த சோற்றை சரியாக ஒரு மணிக்கு சாப்பிட்டு முடித்து மதியம் தேநீர் அருந்துவது, வீட்டிற்கு செல்வது என்று இயந்திரத் தனமாக செயல்படுவது. இவையே நாம் உருவகப் படுத்தாவிட்டாலும் நம் கண் முன்னே நிற்கும் சராசரி அரசு ஊழியரின் தோற்றம். 

ஆனால், மக்கள் நலனே தன்னலம் என்று செயல்படும் சில நூறு அரசு ஊழியர்கள் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை. எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி நம் தெருமுனையில் குப்பையையும் கூளங்களையும் அள்ளுபவனும், அடைபட்டிருக்கும் பாதாள சாக்கடையில் பாதுகாப்பு கவசம் ஏதும் இன்று இறங்கியவனும், மழை இரவு நேரங்களிலும் மின் இணைப்பை சரி செய்ய வீதி தோறும், வயல் வெளி தோறும் நடந்து செல்பவனும், பல்லாயிரக் கணக்கானோர் சொகுசாக பயணம் செய்ய ரயில் பாதைகளில் இரவு நேரங்களிலும் ரோந்து செல்பவனும், தூக்கம், நிம்மதி, உறவுகள் என்று அனைத்தையும் தொலைத்து விட்டு, எங்கோ ஒரு எல்லை நிலையில் உயிரை பணயம் வைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவனும், இன்னும் இது போன்ற லட்சிய மனிதர்களும் அரசு ஊழியராகத்த்தான் பணி செய்துக் கொண்டிருக்கிறார்கள். 

இன்னும் இது போன்ற எண்ணற்ற தவறான புரிதல்கள் நம்மிடையே உள்ளன. அவற்றைப் பற்றிய எமது பதிவுகள் மேலும் தொடரும்.