திங்கள், 20 அக்டோபர், 2014

கயவர்களுக்கு பாரத ரத்னாவா?

இன்றைய தினம் (20/10/2014) அதிமேதாவி சுப்ரமணிய சுவாமி முத்து ஒன்றை உதித்திருக்கிறார். அதாவது இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு இந்திய நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்க வேண்டுமாம். இந்த செய்தியை தொலைக்கட்சிகளில் கண்டபோது எனக்கு வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை. தமிழக அரசியல் கட்சிகளை சீண்டுவதே இந்த சு.சுவாமிக்கு வாடிக்கையாகிப் போனது ஊரறிந்த விஷயம். அவ்வாறாக சீண்டுவதாக நினைத்து மீண்டும் இப்படி உளறிக்கொட்டி இருக்கிறார் இந்த அதிபுத்திசாலி அங்குசாமி.

பாரத ரத்னா என்பது இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த பெருமையாகும். பாரத நாட்டிற்கு பெருமை சேர்த்த பெருமக்களை கௌரவிக்கும் விருது. இந்த விருது சில அரசியல் காரணங்களுக்காக சர்ச்சைக்குள்ளாகி இருந்தாலும், இதுவரை இந்த விருதை அலங்கரித்தவர்கள் யாரும் சாதாரணமானவர்கள் அல்ல. ஒவ்வொருவரும் ஒரு ரத்தினமே. அத்தகைய பெருமக்கள் வரிசையில் இடம் பெற ஒரு தகுதி வேண்டும். அத்தகைய தகுதி சிறிதும் இல்லாத ராஜபக்ஷே போன்ற கீழ்மக்களுக்கு இந்த விருதை வழங்க வேண்டும் என்று சு.சுவாமி கோரி இருப்பது, இந்த விருதை இதுகாறும் பெற்ற மேன்மக்களை சிறுமைப் படுத்தும் செயலி அன்றி வேறொன்றும் இல்லை. 

ராஜபக்ஷே இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும்படி எந்த ஒரு சிறப்பான செயலையும் செய்துவிடவில்லை. ஆனால் அதற்கு மாறாக இந்திய துணைக்கண்டத்திற்கும், இந்தியமக்கள், குறிப்பாக தமிழக மக்களுக்கும் தீமை தரும் பல நிகழ்வுகளை செய்து காட்டியுள்ள ஒரு மிகச் சிறந்த கயவன். கயவன் என்ற சொல் கூட தம்மை நொந்துக் கொள்ளும்படியான கிழமை படைத்தவன் இந்த பெரிய மனிதன். இத்தகைய ஒருவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று கோருபவன் எத்தகைய கோணல் மனம் படைத்தவன் என்பதை நாகரீக மனிதர்கள் புரிந்துக் கொள்வார்கள். 

ராஜபக்ஷே இந்திய நாட்டிற்கு எரிச்சலை ஊட்டும் விதமாக இலங்கையில் சீன ராணுவத்திற்கும், சீன ஒற்றர்களுக்கும் அடித்தளம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். எந்த நேரத்திலும் சீனா மூலமாக ஒரு தாக்குதல் நிகழுமேயானால் அதற்கு இலங்கை பெரும் பங்கையாற்றும் விதமாக அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுள்ளார் ராஜபக்ஷே. இலங்கையுடன் எந்த ஒரு ராணுவ அல்லது வெளியுறவு நடவடிக்கை நடந்தாலும் அது தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும் என்று சீன அரசு அறிவிக்கும் அளவிற்கு இலங்கைக்கும் சீனாவிற்கும் நெருக்கம் இருக்கிறது. சீன நெருக்கம் என்பது இந்திய பெருங்கடலில் இந்திய ஆதிக்கத்தை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டதாகும் என்பது உலக அரசியல் சிறிதும் இல்லாதவர்கள் கூட அறிந்த விஷயம். இத்தகைய செயல்கள் மூலம் தாம் இந்திய நலனுக்கு எதிரானவர் என்பதை தெளிவாக்கி இருக்கிறார் ராஜபக்ஷே. 

கடந்த காங்கிரசு அரசும் சரி, இப்போதைய மோடி அரசும் சரி பலமுறை வற்புறுத்தியும் 13A அரசியல் சட்ட திருத்தத்தை இன்றுவரை கொண்டுவராத ஒரு பெருந்தகையாளன் இந்த ராஜபக்ஷே. 

இந்திய நாட்டின் நலத்தை சீர்குலைக்கும் எண்ணம் கொண்ட பாகிஸ்தானுடன் ராணுவ மற்றும் வெளியுறவு ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டு இந்திய அரசிற்கு ஏளன பார்வையை பரிசளித்தவன் இந்த ராஜபக்ஷே.

இலங்கையின் ராணுவ வலைதளத்தில் தமிழக முதலவர் பாரத பிரதமருக்கு கடிதம் எழுதுவதை கொச்சைப் படுத்தி ஏளன சித்திரம் வரைந்த கீழ்மக்களின் அதிபர் இந்த ராஜபக்ஷே. 

இப்படி பாரத ரத்னா விருதிற்கு சிறிதும் பொருத்தமில்லாத ராஜபக்ஷேவை அவ்விருதிற்கு சிபாரிசு செய்யும் சுப்ரமணிய சுவாமியை பாரதிய ஜனதா கட்சி கண்டிக்க வேண்டும். அல்லது இந்த விஷயத்தில் தங்களின் நிலைப் பாட்டை தெளிவாக்க வேண்டும். இதை விடுத்து சு.சுவாமி செய்யும் சேட்டைகளை வழக்கம் போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் அது மனக்கசப்பை மட்டுமே உருவாக்கும். இதற்குப் பதிலாக பாரத ரத்னா விருதை இந்திய விரோத போக்கை ராஜபக்ஷே போல் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகவே கடைபிடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்களுக்கு வழங்கி விடலாம்.

ராஜபக்சேவுக்கு பா.ர. கொடுக்க திடீர் என்று சிபாரிசு செய்ய  வேண்டிய என்ன?  அவர் கூறும் காரணமான விடுதலைப் புலிகளை அழிப்பு நிகழ்ந்தது 2009 இல். ஆறு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் ஞானம் வந்ததா? இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இப்படி ராஜபக்ஷேவை போற்றி வைத்தால் தமிழகத்தில் உள்ள மக்கள் உணர்ச்சி வசப்பட்டு சு.சுவாமி வீட்டின் எதிரில் ஆர்பாட்டம் செய்வார்கள் என்ற எதிர் பார்ப்பு சு.சுவாமிக்கு இருக்கலாம். அங்கே தப்பித் தவறி  ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதையே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று கூறி தமிழக ஆட்சியை கவிழ்க்கலாம், அல்லது ஜெயலலிதாதான் இதில் ஈடுபட்டிருக்கிறார் என்று உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டு அவருடைய ஜாமீனை ரத்து செய்ய கோரலாம் என்ற கோரமான புத்தியாக கூட இருக்கலாம். யார்தான் அறிவர் அற்பர்களின் அடுத்த அசைவை...!!     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக