இந்த பாடலை எல்லோருடைய செவிகளுக்கும் கொண்டு சென்றிருப்பது 'வலைத்தளம்' என்றாலும் தமிழகத்திலிருந்து ஏற்றுமதியாகி யிருப்பது நமக்கு பெருமைதரும் விஷயம். இந்த பாடலை அடிப்படையாக வைத்து அவரவர் மொழிகளில் ஆங்காங்கே இருக்கும் செய்திகளை இட்டு கட்டி பாடல்கள் புனைந்திருக்கிறார்கள். அவை அனைத்தும் 'கொலவெறி' என்றே தொடங்குவது மிகவும் ஆச்சரியம். அப்படி என்னதான் அந்த வார்த்தையின் மீது அவர்களுக்கு கவர்ச்சி ஏற்பட்டதோ தெரியவில்லை.
தமிழில் மங்கலமான வார்த்தைகளை கொண்டு கவிதை புனைவது பாரம்பரியம் ஆகும். 'உலகு' என்ற வார்த்தையை கொண்டே பெரிய புராணம், கம்பராமாயணம் போன்ற காவியங்கள் பிறந்தன. சுமார் இருபத்தெட்டு வார்த்தைகளை மங்கல வார்த்தைகள் என்று தமிழர்கள் தொகுத்திருக் கிறார்கள். நல்ல கவிஞன் அந்த வார்த்தைகளை கொண்டுதான் கவி பாடுவான். நிச்சயமாக 'கொலவெறி' என்பது மங்கல வார்த்தை இல்லை. ஆனால் அதை கொண்டு ஒரு பாடலை தொடங்குவது மங்கல எண்ணம் கொண்ட தமிழர்கள் விரும்பமாட்டார்கள். ஆயினும் ஒரு பொழுது போக்குக்காக உருவாக்கப்பட்ட பாடல்தான் இது என்றாலும் நமக்கு என்னவோ போல் தோன்றுகிறது. தனுஷ்-ஐஸ்வர்யா சொல்வது போல இது வேடிக்கைக்காக எழுந்த பாடல் என்று கொள்ள முடியாது. இந்த வார்த்தை பலரின் மனதில் எதிர் எண்ணங்களை தோற்றுவித்திருக்கிறது.
தமிழ் மீது பற்று கொண்ட யாழ்ப்பாணத்தை சார்ந்த தமிழ் அன்பர்கள் மிகச்சிறந்த கொலவெறி சாயல் கொண்ட பாடல் ஒன்றை இயற்றியுள்ளனர். அதுவும் கொலவெறி இசையின் மீதுதான் எழுந்திருக்கிறது. மிக குறுகிய காலத்தில் வலைதளத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழர்கள் தமிழ் பற்று அற்று கிடப்பதை கண்டித்து எழுதப்பட்ட அந்த பாடல் தனுஷின் பாடலுக்கு பதிலடி என்று தமிழார்வலர்களால் விமரிசிக்கப்படுகிறது. திரு. தமிழருவி மணியன் ஒரு படி மேலே சென்று இனப்பற்று கொண்ட தமிழர்கள் தனுஷ் நடிக்கும் அந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார். எந்த அளவிற்கு ஆதரவை பெற்றதோ ஏறத்தாழ அதே அளவிற்கு கண்டனங்களையும் சுமந்து வருகிறது இந்த பாடல். ஆயினும் தமிழ் விரோத முத்திரை குத்தும் அளவிற்கு அந்த பாடல் வரவில்லை என்பது நம் கருத்து.
இதற்கு முன்னர் தமிழின் பெருமையை குழிதோண்டி புதைத்தோர் எண்ணற்றோர். அவர்களையெல்லாம் கண்டிக்க வேண்டும், ஒதுக்க வேண்டும். ஆனால் நாம் அவர்களை பெருமை படுத்தி ஆராதிக்கிறோம். தமிழன் ஒரு காட்டு மிராண்டி என்று சொன்ன பெரியாரை பெருமை படுத்துகிறோம். மத்தியில் தன்னுடைய குடும்பத்தார் அமைச்சர்களாக இருக்க வேண்டும், மாநிலத்தில் தன்னுடைய அரசு நீடிக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு துணை நின்ற கருணாநிதியை கொண்டாடுகிறோம். தமிழகமெங்கும் இளைய தலைமுறையினர் குடித்து சீரழிந்து வள்ளுவம் பொய்யாகி தலைகுனியும் வண்ணம் செயல் பட்டு வீதிதோறும் சாராயக்கடைகளை திறந்து வைத்திருக்கும் தமிழக அரசை வாழ்த்துகிறோம். இத்தகைய செயல்களால் தமிழ் என்ன பெருமை பட்டதா? அப்போதெல்லாம் சிறுமை பட்ட தமிழை தூக்கி பிடிக்க நாம் தவறி விட்டோம். ஆனால் பொழுது போக்கிற்காக கூத்து கலைஞர்கள் உருவாக்கும் பாடல் மற்றும் இசையை விமரிசிக்க தயாராகிறோம். இது நம்முடைய கையாலாகத்தனத்தை தான் காட்டுகிறது. தவிர விமரிசனத்தில் உள்ள துளியும் சத்து இல்லை என்பதையும் பறை சாற்றுகிறது.
இந்த நேரத்தில் இத்தகைய வேடிக்கை மனிதர்களை பார்த்து நமக்கும் கேட்க தோன்றுகிறது, "ஏன் இந்த கொலவெறி?"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக